சாத்தூர் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை செய்த சம்பவம் குறித்து கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் புதுசூரங்குடியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 25). இவருக்கும், வெம்பக்கோட்டை சிவலிங்காபுரத்தை சேர்ந்த மதன்குமார் (27) என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது.
அப்போது 30 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தொழில் தொடங்க கூடுதல் வரதட்சணை கேட்டு மதன்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மகாலட்சுமியை சித்ரவதை செய்தனர்.
இதுதொடர்பாக அவர் சாத்தூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின்படி சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது கணவர் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணையாக ரூ. 1 லட்சம், நகைகள் வாங்கிவரும்படி வற்புறுத்தியதாகவும், அதனை தர மறுத்தால் விவாகரத்து செய்துவிடுவோம் என்றும் கூறியதாக மகாலட்சுமி போலீசில் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் மதன்குமார், அவரது தந்தை செல்வராஜ், தாயார் மாரியம்மாள், சகோதரி நிர்மலாதேவி, அவரது கணவர் சேர்மக்கனி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.