உள்ளூர் செய்திகள்
சுற்றுலாத்தலமான தேவதானம் சாஸ்தா கோவில் அருவியை காணலாம்

தேவதானம் சாஸ்தா கோவில் அருவிக்கு செல்ல அனுமதி- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Published On 2021-12-18 09:29 IST   |   Update On 2021-12-18 09:29:00 IST
மழை குறைந்ததால் தேவதானம் சாஸ்தா கோவில் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தளவாய்புரம்:

சேத்தூர் அருகே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் தேவதானம் சாஸ்தா கோவில் அணைக்கட்டுப்பகுதி உள்ளது. இதனருகே சுற்றுலா பயணிகள் குளிக்க அருவி இருக்கிறது. இது சேத்தூர் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு கொரோனா சமயத்தில் சுற்றுலா பயணிகள் சென்று குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது தொடர் மழை காரணமாக இங்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

தற்போது மழை பெய்யாததால் தண்ணீர் வரத்து குறைந்தது. இதனையடுத்து சேத்தூர் பகுதி வனவர் கார்த்திக் ராஜா வனத்துறை சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது:-

சுற்றுலா பயணிகள் தற்போது சனி, ஞாயிறு மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் மட்டும் சாஸ்தா கோவில் அருவி பகுதிக்கு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மேலும் இங்கு இவர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவதானம் சாஸ்தா கோவில் அருவியில் குளிக்க அனுமதி அளித்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News