விருதுநகரில் மகளிர் சுயஉதவிக்குழு மேலாளரிடம் பணம் பறிக்க முயற்சி: பெண் உள்பட 2 பேர் கைது
விருதுநகர்:
விருதுநகர் பெருமாள் கோவில் மேல தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 31). இவர் மகளிர் சுய உதவிக்குழுவில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
சதீஷ்குமார் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும் சென்று பணம் வசூலிப்பது வழக்கம். அதன்படி காசிராஜா என்பவரது வீட்டில் குடியிருந்த கீதா என்ற கீதாமணி (38) வீட்டிற்கு பணம் வசூலிக்க சென்றார்.
அப்போது கீதாவும், மேலரதவீதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (35) என்பவரும் சதீஷ்குமாரிடம் ரூ.2 ஆயிரம் கொடுத்தால் பெண்ணிடம் உல்லாசமாக இருக்கலாம் என ஆசைவார்த்தை கூறி உள்ளனர். மேலும் அங்கிருந்த ஒரு பெண்ணையும் காண்பித்துள்ளனர்.
ஆனால் சதீஷ்குமார் வேண்டாம் என கூறி வெளியேற முயன்றபோது அவரை வீட்டுக்குள் இழுத்துள்ளனர். மேலும் அவர் வைத்திருந்த பணப்பையையும் பறிக்க முயன்றனர்.
அங்கிருந்து தப்பிய சதீஷ் குமார் இதுகுறித்து விருதுநகர் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி காசிராஜா, வெங்கடேஷ், கீதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து கீதா, வெங்கடேஷ் கைது செய்யப்பட்டனர்.