உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பொதுமக்கள் தடுப்பூசி சான்றிதழுடன் நடமாடவேண்டும்- கவர்னர் அதிரடி அறிவிப்பு

Published On 2021-12-12 08:03 GMT   |   Update On 2021-12-12 08:03 GMT
தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் கவர்னர் தமிழிசை புதுவையில் பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
புதுச்சேரி:

கொரோனாவை பரவலை தடுக்க 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக புதுவையை மாற்ற அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

இதுவரை மாநிலம் முழுவதும் 2-வது தவணை உட்பட 13 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாதவர்களை வீடு, வீடாக கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி கட்டாய தடுப்பூசி செலுத்தும் சட்டமும் அமலுக்கு வந்துள்ளது.

இருப்பினும் பொதுமக்களிடம் தடுப்பூசி சான்றிதழ் உள்ளதா? என ஆய்வு செய்யப்படவில்லை.

தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் கவர்னர் தமிழிசை புதுவையில் பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதனிடையே உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இதனால் தடுப்பூசி போடும் பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று வில்லியனுவரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை கவர்னர் தமிழிசை நேரில் சென்று ஆய்வு செய்தார்.



அங்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வந்தவர்களிடம் கலந்துரையாடினார். தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து அவர்களிடம் எடுத்துரைத்தார்.

இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

ஞாயிற்றுக்கிழமை என்றும் பாராமல் டாக்டர்களும், செவிலியர்களும் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதை புதுவை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இன்று முதல் தடுப்பூசி போட்டவர்களுக்கான ஆவணங்கள் அவ்வப்போது பரிசோதனை செய்யப்படலாம்.

எனவே புதுவை மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திய சான்றிதழை தங்களோடு வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு தமிழிசை கூறினார்.

ஆய்வின் போது சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Tags:    

Similar News