உள்ளூர் செய்திகள்
கொரோனா தடுப்பூசி

புதுவையில் தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published On 2021-12-08 02:37 GMT   |   Update On 2021-12-08 02:37 GMT
புதுவையில் கடந்த வாரம் வரை தினமும் 3 ஆயிரம் பேர் வரை மட்டுமே போட்டுக்கொண்ட தடுப்பூசியை தற்போது 8 ஆயிரம் பேர் வரை செலுத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

புதுச்சேரி மாநிலத்தில் தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

புதுவையில் கொரோனா தொற்று பாதிப்பின் வேகம் குறைந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கொரோனா தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 100 சதவீத தடுப்பூசி இலக்கை எட்ட வீடுவீடாக சென்று தடுப்பூசி போடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது.

அதுமட்டுமின்றி தற்போது ஒமைக்ரான் பாதிப்பு தொடர்பான தகவல்கள் பரவி வருவதால் மக்கள் மத்தியில் பீதியும் எழுந்துள்ளது. தொற்று பரவலை தடுக்க தடுப்பூசிதான் ஒரே ஆயுதம் என்று அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும் தடுப்பூசி போடாதவர்கள் பொதுஇடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் சலுகைகளை பெற தடுப்பூசி கட்டாயம் செலுத்தவேண்டும் என மக்கள் மத்தியில் தகவல் பரவி வருகிறது. இதன் எதிரொலியாக இதுநாள் வரை தடுப்பூசி செலுத்த தயங்கியவர்கள் தற்போது போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் கடந்த ஒரு வாரமாக தடுப்பூசி போடுபவர் களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த வாரம் வரை தினமும் 3 ஆயிரம் பேர் வரை மட்டுமே போட்டுக்கொண்ட தடுப்பூசியை தற்போது 8 ஆயிரம் பேர் வரை செலுத்தி வருகின்றனர்.

முதல் தவணை தடுப்பூசியை இதுவரை 7 லட்சத்து 81 ஆயிரத்து 496 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 4 லட்சத்து 95 ஆயிரத்து 321 பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர். இதுவரை 12 லட்சத்து 76 ஆயிரத்து 817 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News