உள்ளூர் செய்திகள்
பணம் மோசடி

பெண் டாக்டரை திருமணம் செய்து ரூ.4 கோடி மோசடி- 4 பேர் மீது வழக்கு

Published On 2021-12-06 02:58 GMT   |   Update On 2021-12-06 02:58 GMT
வில்லியனூர் அருகே பெண் டாக்டரை திருமணம் செய்து ரூ.4 கோடி மோசடி செய்த கணவர், 2-வது மனைவி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வில்லியனூர்:

வில்லியனூர் அருகே உள்ள கோபாலன்கடை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சியாமளாதேவி (வயது 32). இவர் எம்.பி.பி.எஸ். டாக்டர்.

இவருக்கும் லாஸ்பேட்டை சுப்ரமணியர் கோவில் தெருவை சேர்ந்த சுப்ரமணி மகன் அமுதவாணனுக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான்.

சியாமளாதேவியின் திருமணத்தின்போது ரூ.50 லட்சம் மதிப்பிலான சொகுசு கார், 100 பவுன் தங்க நகைகள், 12 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் சீர்வரிசையாக மாப்பிள்ளை வீட்டுக்கு வழங்கப்பட்டது.

திருமணத்திற்கு பிறகு சியாமளாதேவி மாமனார் மற்றும் மாமியார் குடும்பத்துடன் வசித்து வந்தார். அப்போது நகைகளை அடகு வைக்க அவர்கள் கேட்டுள்ளனர். ஆனால் நகைகளை கொடுக்காததால், ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து சியாமளாதேவி, கணவருடன் கோபாலன்கடையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் 2 ஆண்டுகளாக வசித்து வந்தார்.

இந்தநிலையில் சியாமளாதேவியிடம் சொல்லாமல் அமுதவாணன் தாய்லாந்து நாட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் அவர் வெளிநாட்டில் இருந்து திரும்பிவந்து, மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தனது பெட்ரோல் பங்க் கடனில் உள்ளதால், அதனை மீட்க ரூ.2 கோடி 30 லட்சத்தை கடனாக தருமாறு சியாமளாதேவியின் பெற்றோரிடம் கேட்டுள்ளார். மேலும் பெட்ரோல் பங்க் லாப பங்கு தொகையை தருவதாக அவர் உறுதி அளித்துள்ளார். மகளின் நலன் கருதி சியாமளாதேவியின் பெற்றோர் அமுதவாணன் கேட்டபணத்தை அவரிடம் கொடுத்தனர். ஆனால் அவர் அந்த பணத்தை தனது தந்தையிடம் கொடுத்துவிட்டாராம். இதை அறிந்த சியாமளாதேவியின் தந்தை, அமுதவாணனிடம் பணத்தை திருப்பி கேட்டபோது, கொடுக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு சியாமளாதேவி மருத்துவ மேற்படிப்புக்காக பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுவிட்டார். இதனை பயன்படுத்திக்கொண்ட அமுதவாணன் லாஸ்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பணிபுரிந்து வந்தநிலையில் அங்கு கணக்காளராக வேலை செய்த ஹர்ஷவர்தினி என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்துகொண்டார். இதை அறிந்த சியாமளாதேவி பிரான்சில் இருந்து வந்து தன் கணவர் வீட்டுக்கு முறையிட சென்றார். அப்போது மாமனார், மாமியார் மற்றும் 2-வது மனைவி ஆகியோர் அமுதவாணனை பார்க்கவிடாமல், சியாமளா தேவியை தரக்குறைவாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

தனக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்துகொண்டதோடு, சுமார் ரூ.4 கோடி வரை பணம் பெற்று மோசடி செய்தது குறித்து சியாமளாதேவி வில்லியனூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அமுதவாணன், அவரது தந்தை, தாய் மற்றும் 2-வது மனைவி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News