செய்திகள்
அடையாறு கஸ்தூரிபாய் நகர் 3வது பிரதான சாலையில் தேங்கி உள்ள மழைநீர்

2015-ம் ஆண்டு மழை அளவை சென்னை முந்தியதா?

Published On 2021-11-30 03:03 GMT   |   Update On 2021-11-30 05:40 GMT
வடகிழக்கு பருவமழை அதிகபட்சமாக புதுச்சேரியில் 104 செ.மீ. பதிவாகி உள்ளது. அடுத்து காரைக்காலில் 102 செ.மீ. மழை பெய்து இருக்கிறது.
சென்னை:

வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் 1-ந்தேதி முதல் நவம்பர் 29-ந்தேதி (நேற்று) வரையிலான காலக்கட்டத்தில் இயல்பான மழை அளவு 353.7 மி.மீ. ஆகும். தற்போது வடகிழக்கு பருவமழை தனது தாராளத்தை காட்டியதால் இந்த ஆண்டு இந்த காலக்கட்டத்தில் 634.9 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இது இயல்பான அளவை காட்டிலும் 80 சதவீதம் அதிகம் ஆகும்.

இதே காலக்கட்டத்தில் சென்னையில் 615.5 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் சென்னைவாசிகள் போதும்.., போதும்.., என்று சொல்லும் அளவுக்கு 1,125.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான அளவை விடவும் 83 சதவீதம் அதிகம் ஆகும். எனவே சென்னையில் வரலாறு காணாத வகையில் இந்த ஆண்டு மழைப்பொழிவு இருப்பதாக அனைவரும் பேசிக்கொள்கின்றனர்.



இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் நா.புவியரசன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை அதிகபட்சமாக புதுச்சேரியில் 104 செ.மீ. பதிவாகி உள்ளது. அடுத்து காரைக்காலில் 102 செ.மீ. மழை பெய்து இருக்கிறது. சென்னையில் 91 செ.மீ., செங்கல்பட்டு மாவட்டத்தில் 86 செ.மீ., கடலூர் மாவட்டத்தில் 84 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

கடந்த 2015-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், அப்போது வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னையில் 161 செ.மீ. மழை பெய்திருந்தது. நவம்பர் மாதத்தில் மட்டும் 102 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. எனவே 2015-ம் ஆண்டுதான் மழைப்பொழிவு அதிகம். அப்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் 106 செ.மீ. மழையும், கடலூர் மாவட்டத்தில் 72 செ.மீ., புதுச்சேரியில் 81 செ.மீ. அளவு மழைப்பொழிவு இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News