செய்திகள்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பனியன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி-பரபரப்பு
முகமது ரபீக் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
திருப்பூர்:
திருப்பூர் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக்(வயது 32). பனியன் தொழிலாளி. இவரது மனைவி தஸ்லிமாபானு, இவர்களுக்கு முகமது அர்ஸத், ஆபிதா பானு என 2 குழந்தைகள் உள்ளனர்,
கடந்த ஆண்டு தஸ்லிமா பானு ஒரு விபத்தில் இறந்து விட்டார். இந்நிலையில் முகமது ரபீக் வீட்டில் இருந்த ரூ.2 லட்சம் பணத்தையும், 15 பவுன் நகையையும் தனது மனைவியின் சகோதரியான அபிராமியிடம் நம்பிக்கையின் பேரில் கொடுத்து வைத்து ள்ளார்.
தற்போது குழந்தைகளின் படிப்பிற்காக அந்த தொகையையும் நகையையும் திருப்பி கேட்டபோது அபிராமி அதனை திருப்பி கொடுக்காமல் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளதாக கூறப் படுகிறது. இது குறித்து முகமது ரபீக் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
மேலும் இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளார். அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து முகமது ரபீக் இன்று தனது குழந்தைகளுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது பையில் மறைத்து எடுத்து வந்த பெட்ரோல் கேனை திறந்து தன் உடல் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்கப் போவதாக தெரிவித்தார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதிர்ச்சியடைந்ததுடன், முகமது ரபீக்கிடம் இருந்து பெட்ரோல் கேனை பறித்து அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்தி கலெக்டரிடம் மனு அளிக்க அழைத்து சென்றனர். கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.