செய்திகள்
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் குடிசை அமைத்து 2-வது நாளாக போராட்டம்
குடிசை அமைத்த மக்களுக்கு வேறு இடம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவிநாசி:
அவிநாசி ஒன்றியம் தெக்கலூர் ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்
இதற்கிடையில், தெக்கலூர் அய்யன் கோயில் கருவேலங்காடு பகுதியில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு குடிசை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:
தெக்கலூர் காமநாயக்கன்பாளையம் பகுதியில் 100 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். பல தலைமுறைகள் கடந்த நிலையில் ஒரே இடத்தில் நான்கு குடும்பங்களாக இக்கட்டான நிலையில் வாழ்ந்து வருகிறோம்.
வீட்டுமனை பட்டா கேட்டு மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, தற்போது தெக்கலூர் அருகே அய்யன் கோயில் பின்புறம் அரசு நிலத்தில் குடிசை அமைத்துள்ளோம் என்றனர்
இதுகுறித்து வட்டாட்சியர் ராகவி கூறுகையில்:
இந்த இடம் வண்டி பாதை அல்லது குட்டை புறம்போக்கு என்று வருவாய் பதிவேட்டில் உள்ளதாக தெரிகிறது. இது குறித்த ஆய்வும் நடைபெற்று வருகிறது. குடிசை அமைத்த மக்களுக்கு வேறு இடம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்தநிலையில் இன்று 2-வது நாளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.