செய்திகள்
கைது

அரிவாளுடன் புகைப்படம் பதிவிட்ட தொழிலாளி கொலையில் 5 பேர் கும்பல் கைது

Published On 2021-11-08 10:25 GMT   |   Update On 2021-11-08 10:25 GMT
இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் போட்டோ வெளியிட்ட கட்டிட தொழிலாளியை வெட்டி கொலை செய்த வழக்கில் 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

கோவை:

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள காந்திமா நகரை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 27). கட்டிட தொழிலாளி.

இவருக்கும் பக்கத்து வீதியை சேர்ந்த மணி, புலியகுளத்தை சேர்ந்த விக்கு சண்முகம் ஆகியோருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. அசோக்குமார் பீளமேட்டை சேர்ந்த உன்னி, சிவபாலன், ரித்தீஷ் ஆகியோருடன் நண்பராக பழகி வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விக்கு சண்முகம், மணி ஆகியோர் கட்டபஞ்சாயத்து செய்தனர். இதனை அசோக்குமார் தனது நண்பர்களாக உன்னி, சிவபாலன், ரித்திஷ் ஆகியோருடன் சேர்ந்து கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இந்தநிலையில் அசோக்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரிவாளுடன் தனது புகைப்படத்தை பதிவிட்டார். புகைப்படத்துடன் எங்க ஏரியாவில் வந்து போட்டு பாருங்க என பதிவிட்டு இருந்தார். இதனை பார்த்த மணி, விக்கு சண்முகம் ஆகியோர் ஆத்திரம் அடைந்தனர். எனவே அவரை கொலை செய்ய திட்டமிட்டனர்.

சம்பவத்தன்று அசோக்குமார் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார். இதனை பார்த்த விக்கு சண்முகம் தனது நண்பர்களாக மணி, சிவா, பாபு, அமர்நாத் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர்கள் அரிவாள், கத்தியுடன் 2 மோட்டார் சைக்கிளில் விரைந்து வந்தனர்.

மது குடித்த பின்னர் அசோக்குமார் தனது வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அவரை 3 மோட் டார் சைக்கிளில் 5 பேர் கொண்ட கும்பல் பின் தொடர்ந்து சென்றனர். அருகில் சென்றபோது விக்கு சண்முகம் தான் வைத்து இருந்த அரிவாளை எடுத்து அசோக்குமாரின் தலையில் வெட்டினார். இதில் நிலை குலைந்த அவர் கீழே சரிந்தார்.

பின்னர் கும்பல் ஒன்றாக சேர்ந்து மார்பு, தலை, கால் ஆகியவற்றில் வெட்டினர். பின்னர் அங்கு இருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய அசோக்குமாரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். மேலும் முன் விரோதத்தில் தொழிலாளியை வெட்டி கொலை செய்தவர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். நேற்று இரவு இந்த கொலை வழக்கில் தொடர்பு டைய விக்கு சண்முகம் உள்பட 5 பேரை சரவணம் பட்டி போலீசார் கைது செய்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News