செய்திகள்
பயணிகள்

தீபாவளி பண்டிகை: சிறப்பு பேருந்துகள் மூலம் 4.08 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்

Published On 2021-11-04 10:58 GMT   |   Update On 2021-11-04 10:58 GMT
தமிழக அரசு கடந்த திங்கட்கிழமையில் இருந்து தீபாவளி பண்டிகை முன்னிட்டு பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.
தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆண்டுதோறும் தமிழக அரசு சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளியின்போது கொரோனா பயம் காரணமாக குறைந்த அளவிலேயே பொதுமக்கள் பஸ்களில் பயணம் செய்தனர்.

இப்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல மீண்டும் ஆர்வம்காட்டி வந்தனர். குடும்பத்தோடு உற்சாகமாக பயணம் செய்ய முடிவு செய்தனர். தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறையும் குடும்பத்துடன் சொந்த ஊர் செல்ல முக்கிய காரணமாக அமைந்தது.

இதனால் இந்த ஆண்டு அதிகளவு மக்கள் பஸ்களை பயன்படுத்த வாய்ப்பு இருந்ததால் தமிழக அரசு பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது. அதன்படி அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தம் உள்ள 20 ஆயிரத்து 334 பஸ்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டன.

சென்னையில் இருந்து செல்பவர்கள் கோயம்பேட்டில் ஒரு நேரத்தில் கூடுவதால் அதிக அளவு கூட்டம் கூட வாய்ப்பு இருந்த நிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கோயம்பேடு பஸ் நிலையம், மாதவரம் புதிய பஸ் நிலையம், கே.கே. நகர் பஸ் நிலையம், தாம்பரம் ரெயில் நிலையம் மற்றும் தாம்பரம் ‘மெப்ஸ்’ பஸ் நிலையம், பூந்தமல்லி பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டறன.

இதில் கடந்த திங்கட்கிழமை முதல் சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 6,300 பஸ்களுடன் 10,240 சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து துறை விரிவான ஏற்பாடுகளை செய்தது.

கடந்த திங்கட்கிழமையில் இருந்து தற்போது வரை 9,432 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 4.08 லட்சம் மக்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
Tags:    

Similar News