ராணிப்பேட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை சிப்காட் அடுத்த சத்திரம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தயாளன். இவரது மகன்கள் தங்க செல்வன், சேட்டு (வயது28).
இவர்கள் சத்திரம்புதூரிலிருந்து சிலோன் காலனிக்கு செல்லும் சாலையோரம் தங்களுக்கு சொந்தமான இடத்தில் அருகருகே வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
தங்க செல்வன், சேட்டு அவர்களது மனைவிகளும் வயலுக்கு சென்று விட்டனர். அங்கிருந்து மாலை 4 மணியளவில் வீடு திரும்பினர்.
முன்பக்க கதவை திறந்து வீட்டுக்குள் சென்றனர். அப்போது பின்பக்க கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் பார்த்த போது 4 பவுன் நகை, வெள்ளி கொலுசு மற்றும் ரூ.17 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.
வீட்டில் புகுந்த கொள்ளை கும்பல் நகை பணத்தை திருடிவிட்டு தடயங்களை மறைக்க பீரோவில் இருந்து பின் வாசல் வரை மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர்.
இந்த திருட்டு சம்பவம் குறித்து சேட்டு சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். தடயங்களை சேகரித்தனர்.
இச்சம்பவம் குறித்து சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சேவியர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.