செய்திகள்
திருக்கனூர் அருகே பாம்பு கடித்ததில் விவசாயி பலி
திருக்கனூர் அருகே பாம்பு கடித்ததில் விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருக்கனூர்:
திருக்கனூர் அருகே தமிழக பகுதியான சித்தலம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது40). விவசாயி. இவருக்கு பனிமலை என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
இவர் நேற்று முன்தினம் மாலை கூனிச்சம்பட்டு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது அவரை விஷபாம்பு கடித்து விட்டது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தியை மீட்டு மண்ணாடிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணமூர்த்தி புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மனைவி பனிமலை கொடுத்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.