செய்திகள்
புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டிற்கு தடையால் களையிழந்த கோவில்கள் - வாசல் முன்பு நின்று தரிசனம் செய்த பக்தர்கள்
கோவில்கள் திறப்பில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் புரட்டாசி சனிக்கிழமைக்கான சிறப்பு பஸ் இயக்கம் தற்போதைக்கு இல்லை.
திருப்பூர்:
புரட்டாசி சனிக்கிழமை என்றால் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். நாள் முழுவதும் சிறப்பு பூஜை, அன்னதானம் நடக்கும்.
இதனால் திருப்பூரில் இருந்து மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில், அவிநாசிபாளையம் ராமசாமி கோவில், உடுமலை பாலாஜி கோவில், காரமடை ரங்கநாதர் கோவில் தென்திருப்பதி, கோவில் உட்பட பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களுக்கு சிறப்பு பஸ் இயக்கப்படும்.
கொரோனா தொற்று முழுமையாக நீங்காத நிலையில் அக்டோபர் 31-ந்தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மதவழிபாட்டு தலங்கள் திறக்க அரசு தடை தொடருமென அறிவித்துள்ளது. இதனால் வரும் 5 புரட்டாசி சனிக்கிழமைகளில் கோவில் திறப்பதற்கான வாய்ப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில்,
‘கோவில்கள் திறப்பில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் புரட்டாசி சனிக்கிழமைக்கான சிறப்பு பஸ் இயக்கம் தற்போதைக்கு இல்லை. இதற்காக பஸ் நிலையம் வந்து பயணிகள் ஏமாற்றம் அடைய வேண்டாம். வழக்கமான கோவில்களுக்கான பஸ்களின் சேவையில் எந்தவொரு மாற்றமுமில்லை என்றனர்.
இதனிடையே உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. ஆனால் புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக வெள்ளிக்கிழமை இரவே பக்தர்கள் மலை அடிவாரப் பகுதிக்கு வந்து விடுவார்கள்.
பின்னர் கோவிந்தா கோஷத்துடன் விடிய விடிய மலையேறிச் சென்று தேங்காய் பழம் கலந்த அவுளை ஏழுமலையானுக்கு படைத்து வழிபாடு செய்வார்கள். இதில் சுற்றுப்புற கிராமங்கள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனால் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை மாலை வரையிலும் வனப்பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.
அனைவரும் பாதுகாப்போடு வந்து செல்வதற்கு ஏதுவாக வனத்துறையினர், போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் இந்த ஆண்டு ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என்று ஆவலோடு பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பிரசித்தி பெற்ற கோவில்களில் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அதைத்தொடர்ந்து ஏழுமலையான் கோவில் நிர்வாகம் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தடை விதித்துள்ளது. இதே போன்று திருமூர்த்தி அணைக்கு அருகே உள்ள கரட்டு பெருமாள் கோவிலிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தடை விதித்து உள்ளது. புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டிற்கு தடையால் பெரும்பாலான கோவில்களில் பக்தர்கள் வாசலில் நின்று தரிசனம் செய்தனர்.