செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட லாரியையும், காரையும் படத்தில் காணலாம்.

நூதன முறையில் மணல் கடத்தல்: 7 கிலோ மீட்டர் விரட்டி பிடித்த போலீசாருக்கு குவியும் பாராட்டு

Published On 2021-09-12 17:53 GMT   |   Update On 2021-09-12 17:53 GMT
நூதன முறையில் மணல் கடத்த முயன்ற 6 பேரை போலீசார் கைது செய்து வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். அவர்களை 7 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று பிடித்த போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே ஆலந்துறையார் கட்டளை கிராமத்தில் மருதையாறு ஓடுகிறது. அந்த ஆற்றில் இருந்து பெரிய டாரஸ் லாரி‌ மூலம் மணல் கடத்தி அங்கிருந்து திருச்சி மாவட்டம் லால்குடி பகுதிக்கு நேற்று அதிகாலை கடத்திக்கொண்டு செல்ல கும்பல் ஒன்று திட்டமிட்டுள்ளனர். கீழப்பழுர் போலீசாருக்கு இந்த ரகசிய தகவல் கிடைத்தையடுத்து கீழப்பழுவூர் இன்ஸ்பெக்டர் சகாயம் அன்பரசு மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான போலீசார் அவர்களை மடக்கிப்பிடிக்க சென்றனர்.

ஆனால் மணல் கடத்தி வந்த லாரி சுண்டக்குடி சாலை வழியாக மாற்றுப்பாதையில் சிதம்பரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர். இதனையடுத்து போலீசார் அவர்களை பின்தொடர்ந்து மடக்க முயற்சித்து வந்துள்ளனர். லாரியை பின் தொடர்கையில் லாரியின் முன்பு ஒரு காரும் அதிவேகத்தில் சென்று கொண்டிருப்பதை போலீசார் கண்டனர்.

சுமார் 7 கிலோ மீட்டர் விரட்டிச்சென்று மேலப்பழுவூர் கிராமத்தில்‌ உள்ள ஒரு பெரிய வேகத்தடையை ஏறி இறங்க லாரியின் வேகத்தை குறைத்தபோது அதனை சரியாக பயன்படுத்திய போலீசார் கார் மற்றும் லாரி இரண்டையும் மடக்கிப் பிடித்தனர். பிறகு அங்கு வந்த மேலப்பழுவூர் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் மணல் கடத்தல் தொடர்பாக புகார் கொடுத்தார்.

பிறகு அங்கிருந்து லாரி மற்றும் காரை பறிமுதல் செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பணங்கூர் கிராமத்தை சேர்ந்த சின்னப்பா மகன்கள் ரமேஷ்(வயது30) மற்றும் ராஜேஷ்(34), ரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த காசிநாதன் மகன் மருதமுத்த(25), கீழ காங்கியனூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் ராமதாஸ்(24), சுண்டக்குடி கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் மகன் கார்த்திகேயன்(21), பணங்கூர் கிராமத்தை சேர்ந்த நடராஜன் மகன் ராஜ்குமார்(37) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் ராஜ்குமார் மாற்றுத்திறனாளி ஆவார்.

காரில் மாற்றுத்திறனாளி ராஜ்குமாருக்கு உடல்நிலை சரியில்லாதது போல் போலீசாரிடம் நடிப்பதற்காக மாற்றுத்திறனாளியை அழைத்து வந்துள்ளனர்.

யாருக்கும் சந்தேகம் இல்லாமல் மணலை ஏற்றி தார்ப்பாய் போட்டு மூடி லாரிக்கு முன் காரில் மாற்றுத்திறனாளியை வைத்து அழைத்துக்கொண்டு போலீசார் மறித்தால் மாற்றுத்திறனாளிக்கு உடல்நிலை சரியில்லை என சொல்லி ஏமாற்றலாம் என திட்டம் போட்டு இதுபோல் பலமுறை குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த முறை பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான் என்பது போல் கீழப்பழுவூர் போலீசாரிடம் மாட்டிக்கொண்டு கம்பி என்னும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இவர்களை 7 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று பிடித்த இன்ஸ்பெக்டர் சகாயம் அன்பரசு தலைமையிலான போலீசாருக்கு பாராட்டுகள் தற்போது குவிந்து வருகின்றன.
Tags:    

Similar News