செய்திகள்
தா.பழூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
தா.பழூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் ஊராட்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். உதயநத்தம் ஊராட்சியில் உள்ள கோடாலி பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வரவில்லை என்றும், இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் சார்பில் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றும் குடிநீர் வரவில்லை என்று தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் காலிக்குடங்களுடன் கோடாலி கிராமத்தில் சிலால் -அணைக்கரை சாலையின் குறுக்கே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து தடைபட்டது.
பின்னர் இது பற்றி தகவல் அறிந்து வந்த தா.பழூர் போலீசார் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உடனடியாக குடிநீர் வினியோகம் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலர்கள் பொதுமக்களிடத்தில் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக சிலால் அணைக்கரை சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.