ஜெயங்கொண்டம் அருகே கார் டிரைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து புதுச்சாவடியை சேர்ந்தவர் அபிபுல்லா. இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். மூத்த இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்த நிலையில் மனைவி மற்றும் இளைய மகளுடன் வசித்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அபிபுல்லா, தற்போது ஜெயங்கொண்டத்தில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு அவரது வீட்டின் முன்பு மிகப்பெரிய அளவில் வெடி சத்தம் கேட்டுள்ளது. வெளியே வந்து பார்த்த போது, 3 பெட்ரோல் பாட்டில்களும் பேப்பர் உள்ளிட்ட பொருட்கள் வெடித்து சிதறி கிடந்தன. மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டை வீட்டின் மீது வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அபிபுல்லா இது குறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். மேலும் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.