சூளகிரி அருகே காட்டுப்பன்றிக்கு வைத்த வெடி வெடித்து முதியவர் பலி
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா பெத்தசிகரளபள்ளி அடுத்த திம்மராயன் கொட்டாய் கிராமத்சை சேர்ந்தவர் திம்ம ராயப்பா (வயது 56). இவரது நண்பர் சேகர் (40).
இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்று இரவு 9 மணியளவில் சூளகிரி வனப்பகுதியில் காட்டு பன்றிகளை வேட்டையாட புறப்பட்டு சென்றனர். அங்கு அவர்கள் காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்காக வெடிகளை வைத்திருந்தார்.
அப்போது வனப் பகுதியில் இருட்டாக இருந்ததால் காட்டுப் பன்றிக்கு வைத்த வெடியை திம்மராயப்பா , தெரியாமல் காலால் மிதித்து விட்டார். இதில் வெடி வெடித்ததில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் நண்பர் சேகர், படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து சூளகிரி வனத் துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் அவர்கள் விரைந்து சென்று, வெடி வெடித்து பலியான திம்ம ராயப்பா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த சேகரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.
காட்டுப்பன்றிக்கு வைத்த வெடியால் வேட்டையாட போனவர் பலியான சம்பவம் சூளகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.