செய்திகள்
கொள்ளை

கல்லூரி பேராசிரியர் வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை

Published On 2021-08-23 08:22 IST   |   Update On 2021-08-23 08:22:00 IST
கல்லூரி பேராசிரியர் வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நகையை கொள்ளையடித்தவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:

புதுச்சேரி திலாஸ்பேட்டையை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 47). தனியார் கல்லூரி பேராசிரியர். இவருக்கு வனிதா என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். குழந்தைகளின் படிப்புக்காக உதயகுமார் நைனியப்பப்பிள்ளை வீதியில் ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 16-ந் தேதி உதயகுமார் குடும்பத்துடன் மேல்மலையனூர் கோவிலுக்கு சென்றார். பின்னர் அவர்கள் கடந்த 19-ந்தேதி அதிகாலை வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அலமாரியில் வைத்திருந்த 14 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் ஆகும்.

இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் உதயகுமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ், சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News