செய்திகள்
புதுச்சேரி சட்டசபை

சட்டசபை துணை சபாநாயகர் தேர்தல் 26-ந் தேதி நடக்கிறது

Published On 2021-08-14 08:17 IST   |   Update On 2021-08-14 08:17:00 IST
புதுவை மாநிலத்துக்கு ரூ.10 ஆயிரத்து 100 கோடிக்கு பட்ஜெட் தயாரித்து மத்திய அரசின் அனுமதிகோரி கவர்னர் மூலமாக கோப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
புதுச்சேரி:

புதுவை சபாநாயகர் செல்வம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் 26-ந்தேதி காலை 9.30 மணிக்கு கவர்னர் உரையுடன் தொடங்குகிறது. பிற்பகலில் துணை சபாநாயகர் தேர்தல் நடக்கிறது. தொடர்ந்து அலுவல் ஆய்வுக்குழு கூடி சட்டமன்ற கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யும். அப்போது பட்ஜெட் தாக்கல் செய்யும் நாள் குறித்தும் முடிவு செய்யப்படும்.

புதுவை மாநிலத்துக்கு ரூ.10 ஆயிரத்து 100 கோடிக்கு பட்ஜெட் தயாரித்து மத்திய அரசின் அனுமதிகோரி கவர்னர் மூலமாக கோப்பு அனுப்பப்பட்டு உள்ளது. விரைவில் அதற்கு அனுமதி கிடைத்துவிடும்.

முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் வருகிற 23-ந்தேதி டெல்லி சென்று பிரதமர், உள்துறை மந்திரி, நிதி மந்திரி உள்ளிட்டோரை சந்திக்க உள்ளோம். அப்போது ரோடியர், பாரதி, சுதேசி மில்களை தனியார் பங்களிப்புடன் மீண்டும் இயக்குவது குறித்து கோரிக்கை விடுப்போம்.

லிங்காரெட்டிப்பாளையம் சர்க்கரை ஆலையை திறந்து இயக்க ரூ.34 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி மாநில வளர்ச்சிக்காக ரூ.500 கோடி மானியமாக கேட்க உள்ளோம்.

மூடப்பட்ட ஆலைகளை திறக்க அரசு முழுமையாக செயல்படும். புதிய சட்டசபைக்கான அடிக்கல் நாட்டுவிழா செப்டம்பர் 9-ந்தேதி நடைபெற வாய்ப்பு உள்ளது. அதற்காக உள்துறை மந்திரி, சபாநாயகரிடம் தேதி கேட்டுள்ளோம்.

இவ்வாறு சபாநாயகர் செல்வம் கூறினார்.

Similar News