செய்திகள்
யானையின் உடல்மீது பாதுகாப்பு உடைகள் அணிந்தபடி மருத்துவ குழுவினர் கிருமி நாசினி தெளித்த போது எடுத்த படம்.

ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி காட்டுயானை பலி - தடுப்பு நடவடிக்கையில் வனத்துறையினர் தீவிரம்

Published On 2021-08-12 18:07 IST   |   Update On 2021-08-12 18:07:00 IST
மசினகுடி அருகே ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி காட்டுயானை பலியானது. இதனால் தடுப்பு நடவடிக்கையில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கூடலூர்:

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்டு(வெளி மண்டலம்) மசினகுடி, சிங்காரா, சீகூர் மற்றும் கிழக்கு சரிவு வனச்சரகங்கள் உள்ளது. இங்குள்ள முட்புதர் காடுகளில் காட்டுயானைகள், புலிகள், கரடிகள், சிறுத்தைப்புலிகள், செந்நாய்கள், கழுதைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது.

இந்த நிலையில் மசினகுடி அருகே நீலகிரி கிழக்கு சரிவு வனச்சரக பகுதியில் உள்ள மங்களாபட்டியில் நேற்று முன்தினம் வன ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது துதிக்கை மற்றும் வாய் பகுதியில் ரத்தம் வெளியேறியபடி காட்டுயானை ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த், வனச்சரகர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி காட்டுயானை இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக டாக்டர் ராஜேஷ்குமார், கால்நடைகள் பாதுகாப்புத்துறை டாக்டர் ரேவதி ஆகியோர் வரவழைக்கப்பட்டு, காட்டுயானையின் உடல் ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் பாதுகாப்பு உடைகள் அணிந்தவாறு டாக்டர்கள் ராஜேஷ் குமார், ரேவதி ஆகியோர் காட்டுயானையின் உடலில் மாதிரியை சேகரித்தனர். இந்த சமயத்தில் வனத்துறையினர் மற்றும் ஊழியர்கள் யாரும் யானையின் உடல் அருகில் அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து பிற வனவிலங்குகளுக்கு நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யானையின் உடலை வனத்துறையினர் தீ மூட்டி எரித்தனர்.

இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் கூறியதாவது:-

வனப்பகுதியில் சுமார் 4 வயது ஆண் யானை ரத்தம் வெளியேறியவாறு இறந்து கிடந்து உள்ளது. இது தொடர்பாக கள ஆய்வு நடத்தியபோது ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவ்வகை நோய் தாக்கிய விலங்கின் உடலை பிரேத பரிசோதனை செய்வது இல்லை. பாதுகாப்பு உடைகள் அணிந்தபடி மருத்துவ குழுவினர் யானையின் உடலில் மாதிரியை சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்து உள்ளனர். இதன் விவரம் நாளை (இன்று) தெரியவரும். இதனிடையே குறிப்பிட்ட வனப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News