செய்திகள்
வேலைக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் விஷம் குடித்து சிறுவன் தற்கொலை
சிங்காரப்பேட்டை அருகே வேலைக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டான்.
கல்லாவி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே மல்லிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவருடைய மகன் மோகன்தாஸ் (வயது 17). இவன் 10-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கூலி வேலை செய்து வந்தான். கடந்த சில நாட்களாக சிறுவன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளான். இதை சிறுவனின் பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மோகன்தாஸ் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தான். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவனை மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே மோகன்தாஸ் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிங்காரப்பேட்டை போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.