செய்திகள்
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அலமேலுவின் உறவினர்கள் முற்றுகையில் ஈடுபட்டபோது எடுத்த படம்

கொரோனா தொற்றால் பெண் பலி- 2½ மாதங்களுக்கு பின்னர் உடலை ஒப்படைத்ததால் உறவினர்கள் முற்றுகை

Published On 2021-08-11 16:01 IST   |   Update On 2021-08-11 16:01:00 IST
கொரோனா தொற்றால் இறந்த பெண்ணின் உடல் 2½ மாதங்களுக்கு பின்னர் ஒப்படைக்கப்பட்டதால் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு:

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் அலமேலு (வயது 40). இவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து கடந்த மே மாதம் 19-ந்தேதி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மே மாதம் 22-ந்தேதி பரிதாபமாக உயிரிழந்தார். கொரோனா தொற்றால் உயிரிழந்த அலமேலுவின் உடலை உறவினர்களிடம் கொடுக்க முடியாது. நாங்களே எரித்துவிடுவோம் என்று கூறி ஆஸ்பத்திரி சார்பில் தெரிவிக்கப்பட்டது. அன்றைய தினம் ஆஸ்பத்திரி சார்பில் அலமேலுவின் உடல் எரிக்கப்பட்டு விட்டதாக அவரது உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் இருந்து அலமேலுவின் உறவினர்களை தொடர்பு கொண்டு அலமேலுவின் உடல் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ளது. உடலை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் நேற்று செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற அலமேலுவின் உறுவினர்கள் ஆஸ்பத்திரி அலுவலகத்தை முற்றுகையிட்டு டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் அலமேலுவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தவறு செய்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

அதன் பேரில் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அலமேலுவின் உடலை வாங்கிக்கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் அலமேலுவின் உடலை எரிக்க ரூ.2 ஆயிரத்து 500 மற்றும் முகத்தை பார்க்க ரூ.500 ஆஸ்பத்திரி ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர். லஞ்சம் வாங்கிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது.

கொரோனா தொற்றால் இறந்த பெண்ணின் உடல் 2½ மாதங்களுக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சமபவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News