செய்திகள்
பெத்ததாளப்பள்ளி அருகே விபத்தில் தொழிலாளி பலி
பெத்ததாளப்பள்ளி அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் மேக்னம்பட்டியை சேர்ந்தவர் புவியேந்திரன் (வயது 39). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2-ந் தேதி மோட்டார் சைக்கிளில் ராயக்கோட்டை-கிருஷ்ணகிரி சாலையில் பெத்ததாளப்பள்ளி அரசு பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது வேகத்தடையை கவனிக்காமல் சென்ற புவியேந்திரன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.