செய்திகள்
புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது
புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் சிப்காட் போலீசார், பெங்களூரு - ஓசூர் சாலையில் சிப்காட் பஸ் நிறுத்தம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி வந்த ஒரு சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் புகையிலை பொருட்கள் அட்டை பெட்டிகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தர்மபுரி மாவட்டம் மிட்டனுஹள்ளியை சேர்ந்த அரிகிருஷ்ணன் (வயது 25), நரசிம்மன் (41) ஆகியோர் புகையிலை பொருட்களை விற்பனைக்காக வேனில் கடத்தி சென்றது தெரிய வந்தது. உடனே போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 39 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், ரூ.9 ஆயிரத்து 980 மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேனையும் பறிமுதல் செய்தனர்.