செய்திகள்
கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கிய போது எடுத்த படம்.

அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்

Published On 2021-08-02 15:47 IST   |   Update On 2021-08-02 15:47:00 IST
கொரோனா 3-வது அலையில் இருந்து அனைவரும் தங்களை காத்து கொள்ள கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கூறினார்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகிற 7-ந் தேதி வரை கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் மற்றும் சுங்கச்சாவடி பகுதியில் கொரோனா தொற்று தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேற்று வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா 3-வது அலை பரவாமல் தடுக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் மேற்கொண்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்று எண்ணிக்கை மீண்டும் உயராத வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த அறிவுறுத்தி உள்ளது. அதன்படி வருகிற 7-ந் தேதி வரை கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

கொரோனா 3-வது அலையில் இருந்து நம்மையும், நமது குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ள அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் பரமசிவன், துணை இயக்குனர் கோவிந்தன், நகராட்சி ஆணையாளர் முருகேசன், வட்டார மருத்துவ அலுவலர் சுசித்ரா, டாக்டர்கள் ராஜா, நவீன், விக்ரம், தாசில்தார் பூவிதன், சுகாதார அலுவலர் மோகனசுந்தரம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News