செய்திகள்
குருபரப்பள்ளி அருகே பெண்ணை கத்தியால் குத்தி நகை பறிப்பு
குருபரப்பள்ளி அருகே பெண்ணை கத்தியால் குத்தி நகையை பறித்து சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
குருபரப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளியை அடுத்த சாமந்தமலை பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி பட்டு (வயது 45). இவர் நேற்று முன்தினம் வெளியில் சென்றார். அப்போது முக கவசம் அணிந்து வந்த 2 நபர்கள் பட்டுவின் கண்ணில் மிளகாய் பொடி தூவியும், கத்தியால் குத்தியும் அவர் காதில் அணிந்திருந்த ஒரு பவுன் நகை மற்றும் கொலுசை பறித்து சென்று விட்டனர்.
இதில் காயமடைந்த பட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் பட்டுவுக்கு உறவினர்களான மணி (47), பெருமாள் (38) ஆகிய 2 பேருடன் நிலத்தகராறு இருந்து வந்ததும் தெரிந்தது.
இது தொடர்பாக ஊர் பெரியவர்கள் பேசியும் தீர்வு ஏற்படாத நிலையில் தற்போது பட்டு மீது மர்ம நபர்கள் மிளகாய் பொடியை தூவி நகையை பறித்து சென்றது தெரியவந்தது. இதனால் நில பிரச்சினைக்கும், இந்த நகை பறிப்பு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்குமா? என்ற கோணத்தில் குருபரப்பள்ளி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.