செய்திகள்
குந்தா அணை நீர்பிடிப்பு பகுதியை காணலாம்.

நீலகிரியில் தொடர் மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

Published On 2021-07-29 04:53 GMT   |   Update On 2021-07-29 04:53 GMT
தொடர் மழையால் அவலாஞ்சி உள்ளிட்ட வனப்பகுதிகளில் புதிதாக நீர்வீழ்ச்சிகள் தோன்றி உள்ளது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. கடந்த 3 நாட்களாக மழை குறைந்து பரவலாக பெய்து வருகிறது. பந்தலூரில் அதிக மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தொடர் மழையால் அவலாஞ்சி உள்ளிட்ட வனப்பகுதிகளில் புதிதாக நீர்வீழ்ச்சிகள் தோன்றி உள்ளது. அங்கு நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழையால் மின்வாரிய கட்டுப்பாட்டில் உள்ள 12 அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. வனப்பகுதிகளில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து இருக்கிறது. முழு கொள்ளளவை எட்டியதால் குந்தா அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. மற்ற அணைகளில் தண்ணீர் முன்பு இருந்ததை விட கூடுதலாக 3 அடி உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

பைக்காரா அணையின் 100 அடி கொள்ளளவில் 55 அடியாகவும், 33 அடி கொள்ளளவான கிளன்மார்கன் அணையில் 22.5 அடியாகவும், காமராஜ் சாகர் அணையின் 49 அடி கொள்ளளவில் 32 அடியாகவும், 17 அடி கொள்ளளவு கொண்ட மாயார் அணையில் 15.5 அடியாகவும், கெத்தை அணையின் 156 அடி கொள்ளளவில் 154.5 அடியாகவும் நீர்மட்டம் அதிகரித்து உள்ளது.

அப்பர்பவானி அணையின் 210 அடி கொள்ளளவில் 110.5 அடியாகவும், அவலாஞ்சி அணையின் 171 அடி கொள்ளளவில் 76.5 அடியாகவும், 184 அடி கொள்ளளவு கொண்ட எமரால்டு அணையில் 85 அடியாகவும், 89 அடி கொள்ளளவு கொண்ட குந்தா அணை 88.5 அடியாககவும் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.

நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-2.6, நடுவட்டம்-24, கிளன்மார்கன்-10, அவலாஞ்சி-18, எமரால்டு-12, கூடலூர்-15, தேவாலா-22, செருமுள்ளி-15, பாடாந்தொரை-17, ஓவேலி-14, பந்தலூர்-77.1, சேரங்கோடு-19 என மழை பதிவானது.
Tags:    

Similar News