செய்திகள்
வெடிகுண்டு வீசப்பட்ட இடத்தை போலீசார் பார்வையிட்டபோது எடுத்தபடம்.

புதுவையில் நள்ளிரவில் வெடிகுண்டு வீச்சு

Published On 2021-07-29 02:23 GMT   |   Update On 2021-07-29 02:23 GMT
கடந்த சில மாதங்களுக்கு முன் வில்லியனூர் அருகே புதரில் மறைத்து வைத்து இருந்த குண்டு வெடித்து பெண் ஒருவர் கை சிதைந்தது.
புதுச்சேரி:

புதுவை கொம்பாக்கம்-வில்லியனூர் மெயின்ரோட்டில் பால் சொசைட்டி உள்ளது. இந்த பகுதியில் நேற்று நள்ளிரவு பயங்கர சத்தத்துடன் திடீரென்று வெடிகுண்டு வெடித்தது.

இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தனர். அதற்குள் வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.

இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் நள்ளிரவில் கூட்டம் கூட்டமாக மக்கள் நின்று இதுபற்றி பேசிக் கொண்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் ஒரு கும்பல் திருட முயன்றது. அவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தோம். ஆனால் அவர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விட்டனர். அவர்கள் தான் மிரட்டும் வகையில் வெடிகுண்டு வீசிவிட்டு தப்பிச் சென்று இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து போலீசார் வெடிகுண்டு வீசியவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன் வில்லியனூர் அருகே புதரில் மறைத்து வைத்து இருந்த குண்டு வெடித்து பெண் ஒருவர் கை சிதைந்தது. அதைத்தொடர்ந்தும் புதுவையில் அடுத்தடுத்து வெடிகுண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்து வருவது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Tags:    

Similar News