செய்திகள்
பெரம்பலூர் அருகே பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
பெரம்பலூர் அருகே பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், சத்திரமனை இந்திரா நகர், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கு செல்வம் என்ற மனைவியும், 2 மகள்களும், விக்னேஷ்குமார் (வயது 21) என்ற ஒரு மகனும் உண்டு. குணசேகரன் ஏற்கனவே இறந்து விட்டதால், செல்வம் விவசாய கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார். பி.காம் படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்த விக்னேஷ்குமாருக்கு ஏற்கனவே வயிற்று வலி இருந்து வந்ததாகவும், அதற்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்றும் தெரிகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது விக்னேஷ்குமாருக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. வயிற்று வலியை தாங்க முடியாததால் விக்னேஷ்குமார் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.