செய்திகள்
மகாலட்சுமி- சரோஜா

மனைவி, மாமியாரை கடப்பாரையால் அடித்துக்கொன்ற ஆட்டோ டிரைவர்

Published On 2021-07-15 02:08 GMT   |   Update On 2021-07-15 02:08 GMT
குடும்ப பிரச்சனையில் மனைவி, மாமியாரை அடித்து கொலைசெய்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் தேவியகரம் கச்சிக்குச்சான் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(வயது 48). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி மகாலட்சுமி(33). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் மகாலட்சுமியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த முருகன் அவரிடம் அவ்வப்போது தகராறு செய்து வந்தார்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டபோது, மகாலட்சுமி கோபித்துக்கொண்டு முருக்கம்பாடியில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி கடந்த 9-ந் தேதி திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் கணவன்-மனைவி இருவரையும் நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது கணவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று கூறிய மகாலட்சுமி அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் முருகன் நேற்று முன்தினம் இரவு முருக்கம்பாடிக்கு சென்று மகாலட்சுமியிடம் குடும்பம் நடத்த வருமாறு அழைத்ததோடு அவரிடம் உள்ள நகைகளையும் தருமாறு கேட்டார். ஆனால் குடும்பம் நடத்த வர மறுத்த மகாலட்சுமி நகைகளையும் தர மறுத்துவிட்டார்.

இதில் ஆத்திரமடைந்த முருகன், தான் மறைத்து வைத்திருந்த கடப்பாரையால் அவரது தலையில் ஓங்கி அடித்தார். இதில் படுகாயம் அடைந்த மகாலட்சுமி கூச்சல் எழுப்பியபடி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது குழந்தை மோனிஷா(11), மாமியார் சரோஜா(50) ஆகியோரையும் முருகன் கடப்பாரையால் தாக்கினார். இதில் மகாலட்சுமி, சரோஜா இருவரும் பரிதாபமாக இறந்தனர். சிறுமி மோனிஷா திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறாள். சம்பவம் குறித்து மணலூர் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.
Tags:    

Similar News