செய்திகள்
கோப்புபடம்

கிரானைட் கற்களை வெட்டியபோது மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலி

Published On 2021-07-08 22:18 IST   |   Update On 2021-07-08 22:18:00 IST
காவேரிப்பட்டணம் அருகே கிரானைட் கற்களை வெட்டியபோது, மின்சாரம் தாக்கியதில் வடமாநில தொழிலாளி பலியானார்.
காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அருகே உள்ள ஆத்தெரத்தான் கொட்டாய் என்ற இடத்தில் தனியார் கிரானைட் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜெய கிருஷ்ணாஜனா (வயது 35) என்பவர் கிரானைட் கற்களை வெட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று அவர் கிரானைட் கற்களை எந்திரம் மூலம் வெட்டி துண்டாக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் திடீரென அவரை மின்சாரம் தாக்கியது. இதில் ஜெய கிருஷ்ணாஜனா தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த மற்ற தொழிலாளர்கள் உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலியான சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News