செய்திகள்
விஷம்

2 மகள்களும் காதல் திருமணம் செய்ததால் தாய் தற்கொலை

Published On 2021-07-07 13:06 IST   |   Update On 2021-07-07 13:06:00 IST
ராஜபாளையம் அருகே 2 மகள்களும் காதல் திருமணம் செய்ததால் மனமுடைந்த தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் பாரதி நகரை சேர்ந்த கிருஷ்ணசாமி- தங்கம் தம்பதியினரின் மூத்த மகள் பேச்சியம்மாள். இவர் அதே ஊரை சேர்ந்த கருப்பசாமி என்பவரை 5 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோருக்கு தெரியாமல் காதலித்து திருமணம் செய்து அங்கேயே வசித்து வருகிறார்.

இந்த நிலையில் இளையமகளான கலாவும் காதலில் விழுந்துள்ளார். அவர் தனது சகோதரி கணவரின் சகோதரர் மருதுபாண்டியை காதலித்தார்.

இந்த காதலுக்கு பெற்றோர் சம்மதிக்கமாட்டார்கள் என கருதிய கலா அவர்களுக்கு தெரியாமல் மருதுபாண்டியை சில நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.

2 மகள்களும் தன்னிடம் காதலை மறைத்து அதே ஊரில் அண்ணன்- தம்பியை திருமணம் செய்து கொண்டது தாயார் தங்கத்துக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.

மனமுடைந்த அவர் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். கணவர் கிருஷ்ணசாமி மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று இரவு சிகிச்சை பலனின்றி தங்கம் உயிரிழந்தார்.

இது குறித்து கிருஷ்ணசாமி கொடுத்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News