செய்திகள்
கைது

ராஜபாளையம் அருகே இருதரப்பினர் மோதல்- 7 பேர் கைது

Published On 2021-07-06 14:55 IST   |   Update On 2021-07-06 14:55:00 IST
இருதரப்பை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கி கொண்டனர். மேலும் பிரியங்காவுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே கோதைநாச்சியார்புரம் பகுதியில் இருதரப்பினர் இடையே கோவில் மற்றும் நடைபாதை பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று 3 பேர் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அவர்கள் குடிபோதையில் வாகனத்தில் வேகமாக சென்றபோது அதே பகுதியை சேர்ந்த பெண் பிரியங்கா மற்றும் சிலர் அவர்களை கண்டித்ததாக தெரிகிறது. இதைதொடர்ந்து அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது மோதலாக மாறியது.

இதைதொடர்ந்து இருதரப்பை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கி கொண்டனர். மேலும் பிரியங்காவுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து அவரை ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோதலில் ராஜகுரு என்ற வாலிபருக்கு கால் முறிந்தது. அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இருதரப்பினர் மோதலால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

சம்பவ இடத்தில் போலீஸ் கூடுதல் துணை சூப்பிரண்டு மாரிராஜ், போலீஸ் துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், தாசில்தார் ராமச்சந்திரன் மற்றும் 100-க்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இரு பிரிவினர் மீதும் ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் ஊரில் இருந்து வெளியே யாரும் செல்வதற்கு போலீசாரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Similar News