செய்திகள்
கோப்புபடம்

மாவட்டத்தில் மூதாட்டி உள்பட 3 பேர் கொரோனாவுக்கு பலி

Published On 2021-06-25 19:09 IST   |   Update On 2021-06-25 19:42:00 IST
கடலூர் மாவட்டத்தில் மூதாட்டி உள்பட 3 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மேலும் 151 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 57 ஆயிரத்து 78 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 54 ஆயிரத்து 685 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 739 பேர் பலியாகி இருந்தனர்.

இந்நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 151 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் சென்னையில் இருந்து கடலூர் வந்த 2 பேருக்கும், அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த 3 பேருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 21 பேருக்கும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 125 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 57 ஆயிரத்து 232 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 65 வயது மூதாட்டி மற்றும் 71 வயது முதியவர், கடலூரை சேர்ந்த 65 வயது நபர் ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் அவர்கள் 3 பேரும் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 742 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 230 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் இதுவரை 54 ஆயிரத்து 915 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதுதவிர மாவட்டத்தில் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 108-ல் இருந்து 94 ஆக குறைந்துள்ளது.

Similar News