செய்திகள்
புகார்

பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை- முன்னாள் ராணுவ வீரர் மீது புகார்

Published On 2021-06-13 09:04 GMT   |   Update On 2021-06-13 09:04 GMT
புதுவையில் பயிற்சி மையம் நடத்தி பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் ராணுவ வீரர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மசேஷாத்திரி பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்ததையடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுபோல் சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன், சென்னை பிரைம் தடகள பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் நாகராஜன் ஆகியோரும் பாலியல் தொந்தரவு புகாரில் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் சென்னை அண்ணாநகர் கிளையில் செயல்பட்டு வரும் பத்ம சேஷாத்ரி மில்லினியம் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணியாற்றி வந்த கெபிராஜ் மீதும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.

இதுபோல் தமிழகத்தில் பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் புதுவையிலும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

வில்லியனூரை சேர்ந்த 20 வயது மாணவி புதுவை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் சீருடை பணியாளராக (ஐ.பி.எஸ்.) விருப்பம் கொண்டதால் அவரை பெற்றோர் வடமங்கலத்தில் உள்ள முன்னாள் ராணுவ வீரர் சிவக்குமார் என்பவர் நடத்தி வரும் பயிற்சி மையத்தில் சேர்த்து விட்டனர்.

பயிற்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே அந்த மாணவியிடம் சிவக்குமார் பாலியல் தொந்தரவு செய்ய ஆரம்பித்துள்ளார். மாணவியை வர்ணித்து ஆபாசமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அடிக்கடி அந்த மாணவியை பயிற்சியாளர் சிவக்குமார் உல்லாசத்துக்கு வலியுறுத்தி வந்துள்ளார். இதனால் மன ரீதியாக பாதிக்கப்பட்ட அந்த மாணவி நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் கூற தயங்கி தான் பயிற்சிக்கு செல்ல விரும்பவில்லை என்று அடிக்கடி சொல்லி வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை பயிற்சியாளர் சிவக்குமார் அந்த மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசி ஆசைக்கு இணங்குமாறு அழைத்துள்ளார். இதற்கு உடன்படாவிட்டால் அவதூறு பரப்பி விடுவேன் என்று பயிற்சியாளர் சிவக்குமார் மாணவியை மிரட்டி உள்ளார். இதுபற்றி அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் வில்லியனூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் வில்லியனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News