செய்திகள்
கோப்புபடம்

கொரோனா பரவலால் உற்பத்திக்கு தடை - விதி மீறி செயல்பட்ட பட்டாசு ஆலைக்கு “சீல்”

Published On 2021-05-30 18:14 IST   |   Update On 2021-05-30 18:14:00 IST
கொரோனா ஊரடங்கு காலத்தில் சிவகாசி அருகே விதியை மீறி செயல்பட்ட பட்டாசு ஆலைக்கு தாசில்தார் “சீல்” வைத்துள்ளார்.
சிவகாசி:

இந்தியா முழுவதும் கொரோனா வேகமாக பரவிவரும் நிலையில் தடுப்பு நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக எடுத்துவரும் நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நோய்பரவல் காரணம் காட்டி சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு மற்றும் தீப்பெட்டி, அச்சு ஆலைகள் செயல்படாமல் உள்ளது. மாவட்ட நிர்வாகம் இந்த ஆலைகளை வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் கண்காணித்து வருகிறது.

இதற்கிடையில் சிவகாசி-சாத்தூர் ரோட்டில் உள்ள பேராபட்டியில் வெயில்முத்து என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ரகசியமாக பட்டாசு உற்பத்தி நடைபெற்று வருவதாக சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின் பேரில் சிவகாசி தாசில்தார் ராமசுப்பிரமணியன் மற்றும் வருவாய்த்துறையினர் அந்த பட்டாசு ஆலைக்கு சென்று திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் அதிகாரிகள் வருவதை கண்டு தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் அதிகாரிகள் ஆலையின் பல்வேறு பகுதியில் ஆய்வு செய்த போது 150 பெட்டிகளில் பட்டாசுகள் வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

அதேபோல் ஆலையில் பின்புற பகுதியில் அனுமதியின்றி தகரசெட் அமைத்து அதில் பட்டாசுகள் தயாரித்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து விதியை மீறிய குற்றத்துக்காக அந்த ஆலைக்கு தாசில்தார் “சீல்” வைத்தார். இதேபோல் அனுமதியின்றி இயங்கியதாக கடந்த வாரம் 2 பட்டாசு ஆலைக்கு அதிகாரிகள் “சீல்” வைத்தது குறிப்பிடத்தக்கது.

Similar News