செய்திகள்
சீர்காழி அருகே வீட்டின் பின்புறம் சாராயம் காய்ச்சி விற்பனை- 4 பேர் கைது
சீர்காழி அருகே வீட்டின் பின்புறம் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த எடமணல் கிராமம் பெரியதெருவை சேர்ந்த வை.ஆனந்த்(39) மற்றும் அவரது நண்பர்கள் வருசபத்து பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (55), எடமணல் பகுதியை சேர்ந்த இன்பராஜ் (40), பிரகாஷ் (28) ஆகியோர் ஆனந்த் என்பவர் வீட்டில் எரிசாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக சீர்காழி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன், நடராஜன் கொண்ட குழுவினர் ஆனந்த் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது ராஜேந்திரன் வீட்டின் பின்புறம் உள்ள பருத்திக்கொல்லையில் ஊரல் போட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி அங்கு சென்ற போலீசார் எரிசாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பேரல், பானை ஆகியவற்றை பறிமுதல் செய்து 4 பேரையும் கைது செய்தனர்.