செய்திகள்
புதுச்சேரி

புதுவையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு- விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

Published On 2021-05-28 17:33 IST   |   Update On 2021-05-28 17:33:00 IST
ஊரடங்கு கட்டுப்பாட்டால் கொரோனா தொற்று குறைந்துள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது. தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் சில நாட்கள் நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

புதுச்சேரி:

புதுவையில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது.

மார்ச் இறுதி, ஏப்ரல் மாதத்தில் வேகமெடுத்தது. ஒரு கட்டத்தில் உச்சகட்டமாக ஒரு நாளில் 2 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நாள்தோறும் 30 பேர் பலியாகி வந்தனர். தொற்று அதிகரிக்க, அதிகரிக்க அரசு, தனியார் மருத்துவமனைகள் நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இதனால் ஆக்சிஜன், வெண்டிலேட்டர் படுக்கைகள் அதிகமாக தேவை என்ற நிலை ஏற்பட்டது. அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது.

தனியார் மருத்துவமனைகளில் 100 சதவீத படுக்கைகளையும் அரசே ஏற்றது. பிரதமரின் நிதியுதவியுடன் ஆக்சிஜன் உற்பத்தி மையமும் அமைக்கப்பட்டது. மத்திய அரசிடம் இருந்து ஆக்சிஜன் செறிவூட்டிகளும் பெறப்பட்டது. தனியார் நிறுவனங்களும் மருந்து, உபகரணங்களையும் வழங்கியது.

தொற்று பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு புதுவையில் பிறப்பிக்கப்பட்டது. வருகிற 31-ந் தேதியுடன் இந்த ஊரடங்கு நிறைவடைகிறது.


கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. நாள்தோறும் 2 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. அதேநேரத்தில் நாள்தோறும் சுமார் 9 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

பரிசோதனையை அதிகப்படுத்த தொகுதிதோறும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசியை அதிகளவில் மக்கள் போட்டுக்கொள்ள தடுப்பூசி திருவிழா நடத்தினர். 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட 5 மையங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. கிராமங்களிலும் இந்த தடுப்பூசி மையங்களை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா மேலாண்மை கூட்டம் கவர்னர் தமிழிசை தலைமையில் கவர்னர் மாளிகையில் நடந்தது.

கூட்டத்தில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த மோகன், நிதித்துறை செயலர் அசோக்குமார், உள்ளாட்சித்துறை செயலர் வல்லவன், சுகாதாரத்துறை செயலர் அருண் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாட்டால் கொரோனா தொற்று குறைந்துள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது. தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் சில நாட்கள் நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலாண்மைகூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் ஆலோசனை நடத்த உள்ளார். சுகாதாரத்துறை அதிகாரிகளும் ரங்கசாமியை சந்தித்து இதுகுறித்து விளக்கினர்.

இதனால் புதுவையில் மேலும் சில வாரங்களுக்கு புதுவையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் என தெரிகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

Similar News