செய்திகள்
குழந்தை பெற்றெடுத்த 9-ம் வகுப்பு மாணவி: சித்தப்பா கைது
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 9-ம் வகுப்பு மாணவியை மிரட்டி கற்பழித்த சித்தப்பாவை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த தந்தையை இழந்த 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் தீப்பெட்டி ஆலையில் வேலை பார்க்கும் தனது தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அந்த மாணவியுடைய தாயின் தங்கை கணவர் மாணவியை மிரட்டி கற்பழித்து வந்துள்ளார்.
அந்த மாணவி கர்ப்பமானாள். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் மாணவியிடம் விசாரித்தபோது, தன்னை சீரழித்தது சித்தப்பா என்று கூறாமல் மறைத்து வந்தார். இந்த நிலையில் மாணவிக்கு பிரசவ வலி ஏற்படவே திருத்தங்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.
இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் திருத்தங்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு மாணவியிடம் ரகசியமாக விசாரணை நடத்தினர். அப்போது தன்னை சித்தப்பா மிரட்டி பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அதனால் தான் கர்ப்பமானதாகவும் தெரிவித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து 9-ம் வகுப்பு மாணவியை சீரழித்த சித்தப்பாவை கைது செய்தனர்.