செய்திகள்
ஈரோட்டில் பழக்கடைகள் செயல்பட தொடங்கின
ஈரோட்டில் நேற்று பழக்கடைகள் செயல்பட தொடங்கின. பொதுமக்கள் வந்து பழங்களை வாங்கி சென்றனர்.
ஈரோடு:
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு கடந்த 10-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதில் காய்கறி கடைகள், மளிகை கடைகள் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பழக்கடைகளும், நாட்டு மருந்து கடைகளும் மதியம் 12 மணி வரை திறக்கலாம் என்று தமிழக அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதையடுத்து ஈரோட்டில் நேற்று பழக்கடைகளும் திறக்கப்பட்டன.
ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் காய்கறி சந்தையிலும் பழக்கடைகள் திறக்கப்பட்டன. அங்கு பழங்களை பொதுமக்கள் பலர் வாங்கி சென்றார்கள். இதேபோல் மாநகர் பகுதியில் மதியம் 12 மணி வரை பல்வேறு பழக்கடைகள் திறந்து இருந்தன.