செய்திகள்
விபத்து பலி

ரெட்டியார்பாளையத்தில் சாலையை கடக்க முயன்ற காவலாளி மோட்டார் சைக்கிள் மோதி பலி

Published On 2021-05-11 11:12 GMT   |   Update On 2021-05-11 11:12 GMT
ரெட்டியார் பாளையத்தில் சாலையை கடக்க முயன்ற காவலாளி மோட்டார் சைக்கிள் மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

ரெட்டியார்பாளையம் சின்மயம் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அப்துல்ரகுமான். இவர் சுத்துக்கேணியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் மானேஜராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது தந்தை பீர்முகமது (வயது71). இவர் ரெட்டியார்பாளையத்தில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு செல்ல வீட்டில் இருந்து சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

ரெட்டியார்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள தேசிய வங்கி அருகே சைக்கிளில் இருந்து இறங்கி தள்ளிக் கொண்டே ஜவுளிக்கடைக்கு செல்ல சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக பீர்முகமது மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பீர்முகமது தலையில் பலத்த காயமடைந்தார்.

உடனே அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்து பீர்முகமதுவை சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிது நேரத்தில் பீர்முகமது பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து அவரது மகன் அப்துல்ரகுமான் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News