செய்திகள்
கோப்பு படம்.

கடலூர் முதுநகர் அருகே மின்சாரம் தாக்கி அரசு பள்ளி ஆசிரியர் பலி

Published On 2021-05-06 23:23 IST   |   Update On 2021-05-06 23:25:00 IST
இன்வெர்ட்டர் பேட்டரி ஒயரை சரி செய்து கொண்டிருந்த அரசு பள்ளி ஆசிரியர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர் முதுநகர்:

கடலூர் முதுநகர் அருகே உள்ள பழைய வண்டிபாளையத்தை சேர்ந்தவர் முருகன்(வயது 56). இவர் பெத்தாங்குப்பம் அரசு ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். மனைவியுடன் விவாகரத்து ஆன நிலையில் இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். 

இந்த நிலையில் நேற்று முருகன், வீட்டில் இருந்த இன்வெர்ட்டர் பேட்டரி ஒயரை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் தூக்கிவீசப்பட்ட அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் முருகனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது தங்கை சாந்தி கடலூர் முதுநகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News