திண்டிவனத்தில் இருந்து காரில் மது பாட்டில்கள் கடத்திய போலீஸ்காரர்
வானூர்:
புதுவை மாநிலத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் அங்கு மதுக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.
எனவே, தமிழக பகுதியில் இருந்து ஏராளமானோர் மதுப்பாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.
அதன்படி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் அருவாபாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி விசாரணை நடத்தினர். சோதனையில் அந்த காரில் 10 அட்டைப்பெட்டிகளில் 480 மதுப்பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை திண்டிவனத்தில் இருந்து புதுவை பகுதிக்கு கடத்தி வந்துள்ளனர்.
அந்த காரை புதுவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அங்கப்பன் ஓட்டி வந்தார். அந்த காருக்குள் புதுவை அய்யங்குட்டி பாளையத்தை சேர்ந்த சுந்தர் (வயது 35) என்பவர் இருந்தார். இவர் புதுவையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
உடனே போலீசார் மதுப்பாட்டில்கள், காரை பறிமுதல் செய்தனர். கார் டிரைவர் அங்கப்பன், போலீஸ்காரர் சுந்தர் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.