அருப்புக்கோட்டையில் பிரதமர் மோடி பெயரில் நர்சிடம் ரூ.5½ லட்சம் மோசடி
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 50).
இவர் அந்த பகுதியில் உள்ள கோபாலபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 24-ந்தேதி இவரது செல்போனில் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், உங்கள் வங்கிக் கணக்கில் பிரதமர் மோடி திட்டத்தின் கீழ் பணம் செலுத்தப்பட உள்ளது. எனவே உங்களது கணக்கு எண், ஏ.டி.எம். விவரங்களை தெரிவிக்கும்படி கூறி உள்ளார்.
இதனை உண்மை என்று நம்பிய ராஜேஸ்வரி தனது இரு வங்கிக் கணக்குகளின் விவரங்களையும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அவரது வங்கி கணக்குகளில் இருந்து ரூ. 5 லட்சத்து 43 ஆயிரத்து 706-ஐ யாரோ மோசடி செய்துவிட்டனர்.
ஒரு வங்கி கணக்கில் இருந்து ரூ.44 ஆயிரமும், மற்றொரு வங்கி கணக்கில் இருந்து ரூ.4 லட்சத்து 99 ஆயிரத்து 706-ம் மோசடியாக எடுக்கப்பட்டுள்ளது.
அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி இது குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கியில் இருந்து எந்த அழைப்பும் உங்களுக்கு வராது. கணக்கு எண், ஏ.டி.எம். எண் கேட்டால் யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என எத்தனையோ முறை விழிப்புணர்வு முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் இன்னும் சிலர் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.