செய்திகள்
கொலை

திருப்பத்தூர் அருகே மருமகனை இரும்பு ராடால் அடித்துக்கொன்ற மாமனார்

Published On 2021-04-24 05:37 GMT   |   Update On 2021-04-24 05:37 GMT
திருப்பத்தூர் அருகே மகளை தாக்கியதால் ஆத்திரமடைந்த மாமனார், மருமகனை இரும்பு ராடால் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அடுத்த கவுண்டப்பனூரை சேர்ந்தவர் சுதாகர் (வயது38) கூலி தொழிலாளி.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பரின் மகள் மகேஸ்வரி (29) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவனை பிரிந்து அதேபகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சுதாகர் மாமியார் வீட்டிற்கு சென்றார். பின்னர், மகேஸ்வரிடம் இருவரும் குடும்பம் நடத்தலாம், குழந்தைகளை பார்த்து கொள்கிறேன் என்று அழைத்துள்ளார்.

அதற்கு மகேஸ்வரி நீங்கள் அடிக்கடி குடித்து விட்டு என்னை அடித்து துன்புறுத்துகிறீர்கள் என்று கூறி வர மறுப்பு தெரிவித்தார்.

இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுதாகர் மகேஸ்வரியை கைகளால் சரமாரியாக தாக்கியுள்ளார். அதனை தடுக்க வந்த அவரது மாமியாரையும அடித்துள்ளார். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஈரோட்டில் இருந்த மாமனார் சீனிவாசன் (61) நேற்று முன்தினம் நள்ளிரவு ஊருக்கு வந்து சுதாகர் வீட்டிற்கு சென்று ஏன் என் மகள், மனைவியை அடித்தாய் என்று கேட்டார்.

இதில் இருவருக்கும் தாகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சுதாகர், சீனிவாசனை தாக்க முயன்றார்.

அப்போது சீனிவாசன் அங்கிருந்த இரும்பு ராடால் சுதாகரின் தலையில் சரமாரியாக தாக்கினார்.

இதில் படுகாயம் அடைந்த சுதாகர் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சுதாகரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுதாகர், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாமனார் சீனிவாசனை கைது செய்தனர். 

Tags:    

Similar News