செய்திகள்
சென்னிமலை அருகே தூக்குப்போட்டு எலக்ட்ரீசியன் தற்கொலை
சென்னிமலை அருகே மனைவி தன்னிடம் சரியாக பேசாததால் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே உள்ள நாமக்கல்பாளையம், கிருஷ்ணா கார்டன் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 38). எலக்ட்ரீசியன். ஏற்கனவே திருமணமாகி கணவரை இழந்த மகேஸ்வரி என்ற பெண்ணுக்கும், பாலசுப்பிரமணியத்துக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்து உள்ளது. தற்போது மகேஸ்வரி 4 மாத கர்ப்பமாக உள்ளார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு பாலசுப்பிரமணியம் யாரிடமும் சொல்லாமல் திடீரென வீட்டை விட்டு வெளியே சென்றதாக தெரிகிறது. பின்னர் நேற்று முன்தினம் இரவு பாலசுப்பிரமணியம் வீட்டுக்கு திரும்பி உள்ளார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் உள்ள மின் விசிறி கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு பாலசுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாலசுப்பிரமணியத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், ‘மனைவி தன்னிடம் சரியாக பேசவில்லை என்பதற்காக பாலசுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டது,’ தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.