பவானிசாகரில் 5 பயிற்சி டி.எஸ்.பி.க்களுக்கு கொரோனா தொற்று
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் அரசு அலுவலர் பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. இங்கு அரசு ஊழியர்களுக்கு துறை ரீதியான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார், வருவாய்த்துறை, கல்வித்துறை உள்பட அனைத்து துறையினருக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இங்கு குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற நேரடி டி.எஸ்.பிக்கள் 26 பேர் 45 நாட்கள் பயிற்சிக்கு வந்துள்ளனர். இந்த பயிற்சியில் பங்கேற்ற சில டி.எஸ்.பி.க்களுக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கபட்டது. தொடர்ந்து காய்ச்சல், சளி இருந்தது.
இதையடுத்து பயிற்சி டி.எஸ்.பிக்கள் 26 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பயிற்சி டி.எஸ்.பிக்கள் சுரேஷ்பாண்டியன், வசுந்தராஜ், சஞ்சிவ்குமார், ராஜலட்சுமி, ஹரிசங்கரி ஆகிய 5 டி.எஸ்.பி.க்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்கள் 5 பேரும் ஆம்புலன்சு மூலம் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற பயிற்சி டி.எஸ்.பி.க்கள் மற்றும் ஊழியர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.