செய்திகள்
விசைத்தறி

இரவு நேர ஊரடங்கால் 15 ஆயிரம் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழப்பு

Published On 2021-04-21 16:09 IST   |   Update On 2021-04-21 16:09:00 IST
இரவு நேர ஊரடங்கு பிறப்பித்துள்ள காரணத்தால் ஈரோடு மாவட்டத்தில் விசைத்தறி உற்பத்தியை 50 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு:

ஈரோடு, வீரப்பன் சத்திரம், சித்தோடு, லக்காபுரம், சோலார், அசோகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி செய்யப்பட்டு மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பபட்டு வருகின்றது.

இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதால் வெளி மாநிலங்களில் இருந்து ஈரோடு பகுதிக்கு ஆர்டர் கிடைப்பது பாதிக்கப்பட்டுள்ளதாக விசைத்தறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த 15 நாட்களாக வெளி மாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல் ரூ.100 கோடி மதிப்பிலான துணிகள் தேக்கமடைந்துள்ளன. மேலும் ஒரு மீட்டருக்கு ரூ.2 விலையும் குறைந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று இரவு முதல் இந்த ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் தினமும் 2 ஷிப்டுகள் அடிப்படையில் விசைத்தறிகள் இயக்கப்பட்டு வருகிறது. அதாவது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு ஷிப்டும், இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை ஒரு ஷிப்டு என்ற அடிப்படையில் விசைத்தறிகள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இரவு நேர ஊரடங்கு பிறப்பித்துள்ள காரணத்தால் ஈரோடு மாவட்டத்தில் விசைத்தறி உற்பத்தியை 50 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று இரவு முதல் காலை நேர ஷிப்டு மட்டுமே விசைத்தறிகள் இயக்கப்பட்டன. இரவு நேர ஷிப்டு இயக்கப்படவில்லை.

இதனால் நாளொன்றுக்கு 24 லட்சம் மீட்டர் துணிகள் உற்பத்தியாகும் இடத்தில் இனி 12 லட்சம் மீட்டர் துணிகள் மட்டுமே உற்பத்தி ஆகும். இதவு நேர ஊரடங்கு காரணமாக சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்தனர்.

Similar News