செய்திகள்
விபத்து

சேத்துப்பட்டு அருகே மரத்தின் மீது கார் மோதி கூலித்தொழிலாளி பலி

Published On 2021-04-18 13:45 GMT   |   Update On 2021-04-18 13:45 GMT
சேத்துப்பட்டு அருகே மரத்தின் மீது கார் மோதியதில் கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சேத்துப்பட்டு:

திருவண்ணாமலையை அடுத்த கிளியாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 50). கூலித்தொழிலாளியான அவர் சென்னை செங்குன்றம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். அவரும், மனைவி விருதாம்பாள் (42), மகன்கள் பவுன்ராஜ், நாராயணன் ஆகியோரும் ஒரு காரில் சென்னையில் இருந்து புறப்பட்டு சொந்த கிராமத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை, டிரைவர் சின்னராஜ் ஓட்டி வந்தார்.

நள்ளிரவு 1 மணி அளவில் சேத்துப்பட்டுக்கும் வந்தவாசிக்கும் இடையே கோழிப்புலியூர் கிராமம் அருகில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தின் மீது மோதியது. அதில் பலத்த காயம் அடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் இந்த விபத்தில் வெங்கடேசனின் மனைவி, மகன்கள் மற்றும் டிரைவர் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அவர்கள் சேத்துப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர். மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்குச் சென்றுள்ளனர்.

விபத்து குறித்து தேசூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் பலியான வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வந்தவாசி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News